
குச்சவெளி கடலில் மீனவர் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூடு; படுகாயமடைந்தவர் திருமலை வைத்தியசாலையில்
திருகோணமலை குச்சவெளி கடற்பகுதியில் கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய மீனவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் குச்சவெளி ஜாயாநகர் கிராமத்தைச் சேர்ந்த ஐயூப்கான் இனோஸ் (வயது 23) என்ற இளைஞனே படுகாயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
குச்சவெளி கடற்பரப்பில் அனுமதி பெற்ற சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளை சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடற்படையினரால் சிலர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் படகு மற்றும் சுருக்கு வலைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
சுருக்கு வலையை பயன்படுத்தி சுமார் 7 கிலோ மீற்றருக்கு அப்பால் மீன்பிடிக்க முடியும் என்று சட்டம் இருப்பதாகவும் அதை மீறி மீன்பிடித்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இந்நிலையிலேயே துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. இச் சம்பவத்தின் பின்னர் அப்பகுதியில் பதற்றமான சூழல் தோன்றியுள்ளது.