
நடந்து செல்வதைத் தடுக்கும் அதிகாரம் யார் கொடுத்தது?; எந்தச் சட்டத்தில் உள்ளது?-சுமந்திரன் கேள்வி
யாழ்ப்பாணம் பலாலி வீதியை மாலை 5 மணியிலிருந்து காலை 6 மணி வரை மூடுவதற்கும், எவரும் நடந்து செல்வதை தடுப்பதற்கும் எந்தச் சட்டம் அதிகாரம் கொடுத்தது? என ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பினார்.
35 வருடங்களின் பின் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம்- பலாலி வீதி பல்வேறு நிபந்தனைகளுடன் பொதுமக்களின் பாவனைக்காக நேற்று வியாழக்கிழமை திறந்து விடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்டுப்பாடுகளுடனாவது பாதை திறக்கப்பட்டதை வரவேற்கிறோம்.
ஆனால், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிறுவுவதாக வாக்களித்தவர்கள் சட்டவிரோதமான கட்டுப்பாடுகளை விதிக்கலாமா?
இது சட்டத்தால் பிரகடனம் செய்யப்பட்ட ‘உயர் பாதுகாப்பு வலயம்’ அல்ல. மாலை 5 மணியிலிருந்து காலை 6 மணி வரை வீதியை மூடுவதற்கும், எவரும் நடந்து செல்வதை தடுப்பதற்கும் எந்தச் சட்டம் அதிகாரம் கொடுத்தது.
தேர்தல்கள் நெருங்கும் போது மட்டும்தான் பாதைகளைத் திறப்பீர்களா என கேள்வியெழுப்பினார்.