
கொரோனா உடல்கள் தகனம் தெரிவுக்குழுவை நியமிக்கவும்
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை பலாத்காரமாகத் தகனம் செய்தமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு பொருத்தமான விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார்.
திகதி குறிப்பிடப்படாத அந்தப் பிரேரணை (பா.28/2024)பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த தனி நபர் பிரேரணையில் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளதாவது:
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கான இயலுமை உள்ளதென உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்த நிலையில், மேற்படி உடல்கள் நல்லடக்கம் செய்வதால் நிலக்கீழ் நீரில் வைரஸ் கலப்பதற்கான அபாய நிலை உள்ளதாகக் கூறி கடந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட கொள்கை அளவிலான தீர்மானத்தின்படி செயற்பட்டமையும், அந்த உடல்களை உறவினர்களின் உடன்பாடின்றி தகனம் செய்தமையும் , பின்னர் அவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் செயற்பட்டமை சரியானதல்ல, தவறு என்று தெரிவித்து அரசாங்கமே உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரியிருந்தமையும் இந்த தொற்றினால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தமது சமய ரீதியான இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்கோ அல்லது குறித்த சடலங்களை பார்வையிடுவதற்கோ சந்தர்ப்பம் வழங்கப்படாமையும் இது குறித்து உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் எழுந்த எதிர்ப்புகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தகனம் செய்வதற்குப் பதிலாக ஓட்டமாவடியில் , மஜ்மா நகர் எனப்படும் தனிமையான பிரதேசத்தில் மேற்படி சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட போதிலும், குடும்ப உறவினர்கள் இறுதி கடமைகளைச் செய்வதற்கோ, மரியாதை செலுத்துவதற்கோ, உரிமை மறுக்கப்பட்டமை தொடர்பிலும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் பாரதூரமான தவறுகளை புரிந்துள்ளமையினாலும் குறிப்பிட்ட விடயங்களை உரிய முறையில் விசாரணை செய்து பொருத்தமான விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டும்.

