தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான குருந்தூர்மலையில்சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் புத்தர் சிலை வைக்கும் முயற்சிகள் முறியடிப்பு

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான குருந்தூர்மலையில்சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் புத்தர் சிலை வைக்கும் முயற்சிகள் முறியடிப்பு

நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் அத்துமீறி, சட்டவிரோமாக இராணுவத்தினரின் முழுமையாக பாதுகாப்புடன் அமைக்கப்பட்ட பௌத்த விகாரையில் புத்தர் சிலை நிறுவும் முயற்சி கடும் எதிர்ப்பால் நேற்று முறியடிக்கப்பட்டது.

புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் நேற்று செய்யப்பட்டு, அச்சிலை சிங்கள மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

அத்துடன், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசை-வழிபாடுளை மேற்கொள்வதற்கான முயற்சியில் பௌத்த பிக்குகள், பௌத்தாலோக நற்பணிமன்றம் மற்றும் தென்னிலங்கையைச் சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் ஆகியோர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பலத்த பார்காப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்நிலையில் அங்கு கூடிய மக்கள், தமிழ் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர். இதனால் அந்தநடவடிக்கை கைவிடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டது.

பிறிதொருநாளில் முல்லை மாவட்டசெயலகத்தில் இது குறித்த கலந்துரையாடல் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குருந்தூர் மலை தொடர்பில் ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்குவிசாரணைகள் இடம்பெற்று வருகிறது

அவ்வாறு இடம்பெறும் வழக்கு விசாரணைக்கு அமைவாக, குருந்தூர்மலையில் எவ்வித மதக்கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் உத்தரவிடப்பட்டிருந்தது.

இவ்வாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவை சற்றும் மதிக்காது, எதேச்சதிகாரத்துடன் அங்கு தொல்பொருள் அகழ்வாராட்சி என்னும் போர்வையில் புதிதாக பாரிய அளவில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவ்வாறு அமைக்கப்பட்ட புதிய விகாரைக்குரிய விசேட பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கும், ‘கபோக்’ கல்லினால் ஆன புத்தர் சிலைஒன்றினை குருந்தூர் மலையில் நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியே தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டது.

கடந்த பல நாட்களுக்கு முன்பிருந்தே இந்த விசேட வழிபாடுகளுக்குரிய ஏற்பாடுகளை முப்படையினர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

நேற்று முப்படையினர் இராணுவ உடையின்றி, சிவில் உடைகளில் இந்த வழிபாடுகளுக்குரிய செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த விசேட வழிபாடுகளுக்கு தென்னிலங்கையில் இருந்து பெருந்திரளான பெரும்பான்மை இனத்தவர்களும் பௌத்த பிக்குகளும் அதி சொகுசுவாகனங்கள் மற்றும் பேருந்துகள் மூலம் நேற்று அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் இந்த சட்டவிரோத, எதேச்சதிகார முயற்சியை எதிர்த்து அப்பகுதித் தமிழ் மக்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான கி.சிவலிங்கம், இ.கவாஸ்கர், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஜீவன் சமூக சயற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கென வருகைதந்த மூவரை வழிமறித்த பொலிஸார் அவர்களைத் தாக்கி, கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

தொடர்ந்து, குறித்த பகுதிக்கு, எதுவுமே முன்னர் அறியாதவர் போன்று தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுர மானதுங்க வருகைதந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடினார்.

இங்கு கருத்து வெளியிட்ட அவர், குருந்தூர்மலைப் பகுதியில் தொல்லியல் ஆய்வின்மூலம் கிடைத்த எச்சங்களை பேணிப் பாதுகாப்பதற்காக புணர்நிர்மாணம் செய்யும் வேலைகளையே தாம் முன்னெடுப்பதாகவும், அங்கு புதிதாக கட்டடங்கள் எதனையும் தாம் கட்டவில்லை எனவும் தெரிவித்தார்.

அத்தோடு தமது திணைக்களத்திற்கும், பௌத் துறவிகளுக்கும், இராணுவத்திற்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை எனவும் தெரிவித்தார்.

ஆனால் அவது கருத்துக்களை பொய் என்பதை உறுதி செய்யும் வகையில் முன்பிருந்ததைவிட குருந்தூர் மலையில் பாரிய அளவில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள குருந்தூர் மலையில் பெருமளவான, பௌத்த பிக்குகளும், முப்படையினரும் வழிபாடுகளுக்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அதேவேளை, குருந்தூர் மலையைச்சூழ உள்ள வயல்நிலங்கள் தொல்லியல் இடமெனக்கூறி, பௌத்தபிக்கு தமிழ் மக்களைத் தடுப்பது தொடர்பிலும் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுர மானதுங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, அவ்வாறு பௌத்த பிக்குகள் தடுப்பதற்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என அவர் பதிலளித்தார்.

தொடர்ந்து தமிழ்மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக சட்டவிரோதமாக புத்தர் சிலை நிறுவுதல் மற்றும் வழிபாட்டு முயற்சிகள் நிறுத்தப்பட்டன.

இந்த விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள், தமிழ் மக்கள், இதனோடு தொடர்புடைய திணைக்களங்கள், அமைச்சர் உள்ளிட்டவர்களுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் கலந்துரையாடல் ஒன்றை இந்த விவகாரம் தொடர்பில் நடத்துவதென தீா்மானிக்கப்பட்டது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )