
நாம் ஒப்படைத்த குழந்தைகள் எங்கே?; எத்தனை குழந்தைகளை கொன்றீர்கள் -உறவுகள் கேள்வி
காஸா சிறுவர்களுக்காக நிதி வழங்கும் அரசாங்கத்திற்கு இறுதிப் போரில் தமிழ் குழந்தைகள் கொலைசெய்யப்படும் போது இரக்கம் வரவில்லையா என வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பியுனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,
சர்வதேச நீதியினைக் கோரி நாம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். எமது போராட்டங்களை தடுக்கும் விதத்தில் பல்வேறு அடக்குமுறைகள் இந்த அரசால் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் நாம் நீதிக்கான எமது போராட்டங்களில் தொடர்ச்சியாக பயணிப்போம்.
காஸாவில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட காஸா நிதியத்திற்கு ஜனாதிபதியால் அதிக நிதி ஒதுக்கப்படுகின்றது.
இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இன்னொரு நாட்டிற்கு நன்கொடை வழங்கப்படுகின்றது. இது தமக்கான ஆதரவினை பெருக்குவதற்கான ஒரு அரசியல் நகர்வாகவே பார்க்க முடியும்.
ஏனெனில் எமது தமிழ் சிறுவர்கள் பலரை இறுதிப் போரின் போது உங்கள் கையில் ஒப்படைத்திருந்தோம். அதேபோல இறுதிப் போரில் எத்தனை அப்பாவித் தமிழ்க் குழந்தைகளை கொலைசெய்தீர்கள். அப்போதெல்லாம் இரக்கம் வரவில்லையா.
போரில் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்து, அவயவங்களை இழந்த பிள்ளைகளை உங்களின் கண்களுக்குத் தெரியவில்லையா. நீங்கள் நடாத்திய போர் என்பதால் அது உங்களின் கண்களுக்கு தெரியவில்லை.
எனவே எமது பிரச்சினைகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். அதற்கு அனைத்து நாடுகளும் பரிந்துரை செய்யவேண்டும் என்றனர்.