
யாரை வெல்ல வைப்பதற்காக ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மக்களைக் கோருவது, யாரோ ஒரு ஜனாதிபதி வேட்பாளரை வெல்ல வைக்கும் நோக்கமே என பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் ஒவ்வொரு தடவையும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்கி வந்த நிலையில் துரதிஸ்டவசமாக தமிழ் மக்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட வில்லை.
அதன் காரணமாகவே இம் முறை தமிழ் மக்கள் சார்ந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என தமிழ் தேசியம் சார்ந்து பயணிக்கும் ஐந்து கட்சிகள் சேர்ந்து கொள்கையளவில் முடிவெடுத்தன.
சக தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்பினருடன் கலந்துரையாடி ஒரு தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாராயின் அதனை நாம் ஆதரிப்போம்.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென்று கூறுகிறார். தேர்தலை புறக்கணிக்குமாறு கூறி அவர் யாரை வெல்ல வைக்கப் போகிறார் என்பது தொடர்பில் தமிழ் மக்களுக்கு வெளிப்படையாகக் கூற வேண்டும்.
ஏனெனில் 2005 ஆம் ஆண்டும் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு கூறி என நடந்தது கஜேந்திரனும் அவ்வாறான ஒரு வியூகத்தில் பேசுகிறார் போல நான் நினைக்கிறேன்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவாராயின் அவர் வெல்ல மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
அண்மையில் பொது தமிழ் வேட்பாளராக வேலன் சுவாமிகளை நிறுத்தலாம் என விக்னேஸ்வரன் எம்பி தனது கருத்தை கூறினார் .
வேலன் சுவாமிகளுக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவு உண்டு. ஆனால் நாம் நிறுத்தும்போது வேட்பாளர் நேரடியாக மதம் சார்ந்த ஒருவராக இருக்கக் கூடாது என்பது எனது கருத்து.
வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு கட்சிகளும் தமக்குள் ஒரு வேட்பாளரை வைத்திருப்பார்கள் எல்லோரும் கூடி சரியான ஒருவரை முடிவு செய்வோம் இல்லாவிட்டால் பொது வேட்பாளர் தொடர்பான எண்ணத்தை கைவிடும் நிலை ஏற்படும்.
ஒருவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டால் வடக்கு கிழக்கு சார்ந்து கணிசமான வாக்குகளை பெறுவதன் மூலம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு ,அவர்களது கோரிக்கைகளை தென் இலங்கைக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் எடுத்துச் செல்லும் ஒரு சந்தர்ப்பமாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.