
ஜனாதிபதித் தேர்தல்,பாராளுமன்றத் தேர்தல் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமேயில்லை
ஜனாதிபதித் தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நடைமுறைச் சிக்கல்களால் அது முடியாத ஒன்று என்று தேர்தல் ஆணையம் மீண்டும் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் தனித்தனி வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட வேண்டும் என்றும் அதேசமயம் ஜனாதிபதித் தேர்தலின் போது அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வாக்குச் சீட்டு அச்சிடப்பட வேண்டும் என்றும் ஆணைக் குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், இரு தேர்தல்களிலும் அரசியல் கட்சிகள் வெவ்வேறு விதமாக கூட்டணி அமைக்கின்றன என்றார்.
“அத்தகைய தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கும் அரசியல் கூட்டணி பொதுத் தேர்தலில் பிரிந்துவிடும்” என்றும் தெரிவித்த அந்த அதிகாரி, இவ்வாறு பல நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் ஜனாதிபதித் தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்த முடியாத நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், தேர்தலுக்கான திகதி எதிர்வரும் ஒகஸ்ட் மாத ஆரம்பத்தியில் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு மற்றும் ஜனாதிபதி தேர்தல் சட்டம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி தேர்தல் திகதி தெரிவு செய்யப்படும் என ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான முன்னாயத்த நடவடிக்கையாக தேர்தல் பதிவேடுகள் தயாரித்தல் உள்ளிட்ட விடயங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், எதிர்வரும் தேர்தலுக்கு தங்களைத் தயார்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் பணிகளை மேற்கொள்ள விருப்பும் அரசு ஊழியர்களின் பட்டியல் ஏற்கனவே தயார்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து தேவையான பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடாத்தப்படவுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.