
தமிழர் தாயகத்தில் அகதிகளாக்கப்பட்ட மக்கள்: மீண்டும் சொந்த நிலங்களில் வாழும் வாய்ப்பு
வடக்கு கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து நலன்புரி நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அனைத்து நலன்புரி நிலையங்களும் இவ்வருடம் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு இடம்பெயர்ந்த 1,502 குடும்பங்கள் தற்போது நலன்புரி நிலையங்களில் அனுமதிக்கப்படாமல் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது யாழ்.மாவட்டத்தில் இயங்கி வரும், 3 நலன்புரி நிலையங்களில் 10 குடும்பங்கள் தங்கியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 212 குடும்பங்களுக்கு காணி விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் அவர்களுக்கு வீடுகளும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காணி இல்லாத ஏனைய அனைவருக்கும் காணிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளதுடன் அவர்களுக்கான காணிகள் எதிர்காலத்தில் விடுவிக்கப்படும் எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.