
நாமலுக்கு பதவி; மேலும் பிளவு ரணிலுடன் சேரவும் சிலர் முயற்சி
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமது அதிருப்தியை நேரடியாக அவர்கள் கட்சியின் நிறுவுனரான பஸில் ராஜபக்ஷவிடமே கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியின் வெற்றிக்காக கடந்த காலங்களில் பங்களித்த சிரேஷ்ட உறுப்பினர்கள் இருக்கையில் நாமல் ராஜபக்ஷவுக்கு தேசிய அமைப்பாளர் பதவி வழங்கியமை அதிருப்திக்குரியது என்றும், நீங்களே அந்தப் பதவியில் இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் பஸில் ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை அதிருப்பதிக்கு உள்ளான சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவொன்று சுயாதீனமாக இயங்க திட்டமிடுவதுடன், சிலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை வழங்குவதற்கு ஆராய்ந்து வருவதாகவும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.