
இந்திய எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் வராமல்; தமிழக மீனவர்களைத் தடுத்து நிறுத்துவோம்!; அமைச்சர் டக்ளஸின் உறுதிமொழியால் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது
இந்திய அத்துமீறிய மீன்பிடியாளர்களை நிறுத்துமாறு கோரி நான்கு நாட்கள் இடம்பெற்ற உணவு தவிர்ப்புப் போராட்டம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உறுதிமொழியால் வெள்ளிக்கிழமை கைவிடப்பட்டது.
கடந்த செவ்வாய்கிழமை யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு அருகாமையில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
வெள்ளிக்கிழமை நான்காம் நாள் போராட்ட இடத்திற்கு வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய அத்துமீறிய கடற் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முதலமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் பேசினேன். பாண்டிச்சேரி முதலமைச்சர், எல்லை தாண்டும் மீனவர்களை தடுப்பது தொடர்பில் எழுத்துமூலமான உறுதிமொழி தந்துள்ளார்.
தமிழக முதல்வர் கடிதம் அனுப்பத் தயாராக இருப்பதாகவும் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையகத்துடன் ஆலோசித்து கடிதம் அனுப்புவதாகவும் கூறியிருக்கிறார்.
மீனவர் பிரச்சனை தொடர்பில் பேச வருமாறு இந்திய தரப்பினர் அழைப்பு கொடுத்திருந்தார்கள். இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் வர மாட்டார்கள் என்ற எழுத்து மூலமாக உத்தரவாதம் தந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவேன் என நான் அவர்களிடம் கூறி கூறியுள்ளேன்.
எனது நிலைப்பாடு அன்று என்ன கூறினோனே அதுதான் இன்றும். எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். கைது செய்யப்படுபவர்களை விடுவிக்க எனக்கு அழுத்தங்கள் வந்தாலும் எனது நிலைப்பாடு ஒன்றுதான்.
இதனால் தான் இந்தியா என்னை எதிரியாப் பார்க்கிறது. ஏனைய தமிழ் அரசியல்வாதிகள் மீனவர் பிரச்சினையில் மெளனமாக இருப்பதால் அவர்களை யாரும் எதிரியாகப் பார்ப்பதில்லை.
ஆகவே இந்தியத் தரப்பு சாதகமான சமிக்ஞைகளை காண்பித்த நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடுங்கள் மீனவர்கள் பக்கமே நான் நிற்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்திய துணைத் தூதரகத்துக்குள் சில மீனவர்கள் அழைக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
அத்தோடு, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மீனவர்களுடன் கலந்துரையாடி இந்த உறுதிமொழிகளை வழங்கியதையடுத்து உணவு தவிர்ப்பு போராட்டம் மாலையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக தும்பளை, கொட்டடி, சேந்தான்குளம், குருநகர், மாதகல் பலாலி, தையிட்டி, சக்கோட்டை, மயிலிட்டி, வளலாய், மயிலிட்டி மற்றும் சீத்திப்பந்தல் ஆகிய கடற்தொழில் சங்கங்களைச் சேர்த்து மீனவர்கள் ஆதரவு தெரிவித்து வருகை தந்திருந்தனர்.