
மீனவர்கள் 3ஆவது நாளாக உண்ணாவிரதம்; ஒருவரின் நிலை கவலைக்கிடம்
யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாயுள்ளது.
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் நேற்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது.
யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து கடந்த 19 ஆம் திகதி காலை முதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
செல்லத்துரை நற்குணம், அன்ரன் செபராசா, சின்னத்தம்பி சண்முகராஜா மற்றும் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் ஆகிய நான்கு மீனவர்களே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் நேற்று மூன்றாவது நாளாகவும் ஈடுபட்டனர்.
இதில் ஒரு மீனவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தொரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மீனவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்றையதினம் யாழ்.தையிட்டி அன்னை வேளாங்கன்னி கடற்றொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.