
வெடுக்குநாறிமலையில் பாதுகாப்பு கெடுபிடி: நீண்ட தூரம் காலநடையாக சென்று பக்தர்கள் வழிபாடு
வவுனியா – வெடுக்குநாறிமலையினை சுற்றி பொலிஸாரால் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து கிலோமீற்றர் தூரம் நடந்துசென்று, பொதுமக்கள் ஆலய தரிசனத்தை முன்னெடுத்துள்ளனர்.
மகாசிவராத்திரி தினத்தினை முன்னிட்டு ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த ஆலயத்தின் பிரதம பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் ஆகியோர் நேற்றய தினம் இரவு நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அரசகாட்டுப்பகுதிக்குள் அத்துமீறி நுளைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டு இன்றையதினம் வவுனியா நீதவானிடம் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

Vedukunari Sivan Kovil
இதனையடுத்து இன்றையதினம் ஆலயத்தினை சுற்றி விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், ஆலயத்திற்கு செல்லும் பிரதான பாதைக்கு பொலிஸ் வீதித்தடை போடப்பட்டுள்ளது.
அந்த பகுதிக்குள் வசிப்பவர்கள் மாத்திரம் பொலிசாரின் விசாரணைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை, மகாசிவராத்திரி வழிபாட்டிற்காக தூர இடங்களில் இருந்து வருகைதந்த பொதுமக்கள், உள்ளே செல்லமுடியாதவாறு பிரதான வீதியில் தரித்து நின்ற காட்சிகளும் அங்கிருக்கும் எமது செய்தியாளரின் கமெராவில் பதிவாகியது.

Vedukunari Sivan Kovil
சம்பவ இடத்திற்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சம்பவ இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், செல்வராசா கயேந்திரன், வேலன் சுவாமிகள்,ரவிகரன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
அவர்களது வழிகாட்டலுடன் காலை 10 மணியளவில் பொதுமக்கள் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமையால் ஒலுமடு பிரதான வீதியில் இருந்து சுமார் ஐந்து கிலோமீற்றர் தூரம் காட்டுப்பாதையூடாக நடந்துசென்று பொதுமக்கள் ஆலயத்தினை அடைந்தனர்.
இதேவேளை, குருந்தூர்மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள விகாரைகளில் இருந்து பௌத்த மதகுருக்களும் சிங்கள மக்களும் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
