
சாந்தனின் மரணத்துக்கு இந்திய, இலங்கை அரசுகளே பொறுப்பு
இந்திய மற்றும் ஏனைய நாடுகளின் சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் ஆயிரக்கணகானோர் தடுத்துவைக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக்கப்பட்டும் இருக்கையில் அவர்களை தேடி அலையும் எம் தேச தாய்மார்களின் அவலத்தின் ஒட்டுமொத்த குறியீடாக சாந்தனின் தாயார் இருக்கிறார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
சாந்தனின் மரணம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
33 வருடம் இந்திய மண்ணில் தனிமை சிறையில் போதிய மருத்துவ வசதிகள் இன்றி அடைக்கப்பட்டிருந்த சாந்தன், நீதிமன்றால் விடுவிக்கப்பட்ட பின்னரும் இந்திய இலங்கை அரசுகளின் மெத்தனப் போக்கால் ஒன்றரை வருடம் தொடர்ந்து அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார் எனும் செய்தி எம்மக்கள் அனைவரையும் தாங்கொணா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
33 வருடங்களுக்கு பின்னர் தன் மகனின் முகத்தை காணும் ஏக்கத்தில் காத்திருந்த அவரின் தாயார் மற்றும் குடும்பத்தவர்களின் துயரினை எந்த வார்த்தைகளும் ஆற்றுப்படுத்தப் போவதில்லை. அவரின் குடும்பத்தினரின் துயரில் நாமும் இணைந்துகொள்கிறோம்.
கொடிய இன அழிப்புப் போரினால் இலங்கை, இந்திய மற்றும் ஏனைய நாடுகளின் சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் ஆயிரக்கணகானோர் தடுத்துவைக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக்கப்பட்டும் இருக்கையில் அவர்களைத் தேடி அலையும் எம் தேச தாய்மார்களின் அவலத்தின் ஒட்டுமொத்த குறியீடாக சாந்தனின் தாயார் இன்று இருக்கிறார்.
இனியாவது தடுத்துவைக்கப்பட்டவர்களினதும் காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும் விடுதலைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியே எனவும் தெரிவித்துள்ளார்.