வட, கிழக்கிற்குள் சீனா நுழைவதை தடுத்துள்ளோம்; இந்தியாவில் சாணக்கியன்

வட, கிழக்கிற்குள் சீனா நுழைவதை தடுத்துள்ளோம்; இந்தியாவில் சாணக்கியன்

இலங்கையின் வடக்கு கிழக்கினுள் சீனா உள்நுழைவதை நாம் தடுத்து வைத்துள்ளோம் என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளி விவகார அமைச்சின் அழைப்பில் டெல்லியில் நடைபெற்ற ‘Raisina 2024 Dialogue’ 9 வது மாநாட்டிலே விசேட அழைப்பின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவின் பிரதம அதிதியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

இந்நிலையில் QUAD அமைப்பின் அங்கத்துவ நாடுகளான அமெரிக்கா , இந்தியா, அவுஸ்ரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து, இந்து சமுத்திரத்தினுடைய பாதுகாப்பினைப் பற்றியும், அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நடாத்திய கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உரையாற்றினார்.

அந்த உரையில் அவர் கூறுகையில்,

ஏனைய நாடுகள் QUAD உடன் இணைந்து பணிகளை மேற்கொண்டாலும் அந்த அந்த நாடுகளை குறிப்பிடத்தக்களவு கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். ஏனைய நாடுகள் QUAD உடன் இணைந்து பணிகளை மேற்கொண்டாலும் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பிற்கு பாதகமான விடயங்களை மேற்கொள்கின்றன.

உதாரணமாக, இலங்கையில் 2010ல் அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம், 2015 ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அமைக்கப்பட்ட Port City போன்றவற்றைக் கூறலாம். ஆகவே புதிய நாடுகளை இணைத்துக் கொள்வதனை விட தற்போது செயற்படும் நாடுகளின் பலதரப்புக்களை,உதாரணமாக வடக்கு கிழக்கு தமிழ்த் தரப்பு.

இலங்கையின் கடற்பரப்பில் 2/3 பங்கு வடக்கு கிழக்கிலேயே காணப்படுகின்றது.இது தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களாக காணப்படுகின்றன. இந்தப் பிரதேசங்களில் “சீனாவை வரவேற்பதில்லை” என்றே கூறியுள்ளோம். மூலோபாய இடங்களான (Strategic Locations)திருகோணமலை போன்ற இடங்களை இன்னும் பாதுகாப்பிற்கு உட்படுத்தாமைக்கான காரணம் அந்தப் பிரதேசங்களில் இருக்கும் எங்களைப் போன்ற அரசியல் பிரதிநிதிகளே.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் ஒரு சிவில் சேவகராக இருந்தமையின் காரணத்தினாலும் அவருடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தோம். அவரும் இக் கூட்டத்துக்கு தலைமை தங்கியிருந்தார். QUAD நாடுகளும் எங்களைப் பலப்படுத்த வேண்டும். எங்களுடன் இணைந்து பணி மேற்கொள்வதை அதிகரிக்கும் போதே அது QUAD நாடுகளினுடைய வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.

QUAD மேற்கொள்ளும் பணிகளைப் பற்றி இலங்கையில் உள்ள மக்களுக்கு விளக்கம் இல்லை. இலங்கை, சீனாவினுடைய கடனில் சிக்கியுள்ளது. இலங்கை மக்களுக்கு, சீனாவினுடைய முதலீடு எவ்வளவு பாதகமாக இருந்துள்ளது என்பதனை தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில், சீனா இலங்கைக்கு உதவி செய்கிறது என இலங்கை மக்கள் நினைப்பார்கள். ஆகவே இலங்கையில் வெவ்வேறுபட்ட பணிகளை மேற்கொள்வதற்கு QUAD நாடுகள் முன்வர வேண்டும்.

வடக்கு கிழக்கில் நாம் சீனா உள்நுழைவதை தடுத்து வைத்துள்ளோம். இந்து சமுத்திரத்தில் வாழும் மக்களும் இலங்கையை நல்ல உதாரணமாக எடுக்க வேண்டும். இலங்கைக்கு பொருளாதார நெருக்கடி வந்த வேளையில் QUAD நாடாக இருக்கக் கூடிய இந்தியாவே 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கி உதவியது எனவும் தெரிவித்தார்.

QUAD அமைப்பிலுள்ள 4 நாடுகளும் மேற்கொள்ளும் பணியை எவ்வாறு மேம்படுத்த முடியும்? மேலும் அங்கத்தவர்களை எவ்வாறு இணைத்துக் கொள்ள முடியும்? என்பது பற்றியும் பல ஆலோசனைகள் இங்கு முன்வைக்கப்பட்டன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )