
ஜே.வி.பி.யுடன் சர்வதேச சந்திப்புகள் தொடர்கிறது; ஐரோப்பிய ஒன்றியமும் கலந்துரையாடல்
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் திருமதி காமென் மொரெனோவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாக்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் நடப்பு அரசியல் நிலைமை பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய நிலையில் சர்வதேசத்தின் சந்திப்புகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், ஜனநாயகத்தை பாதுகாத்தலைப்போன்றே தேர்தல்களை பிற்போடுதல் பற்றியும் கவனத்தில் கொள்ளப்பட்டது.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் (Online Safety bill) பற்றியும் இந்த உரையாடலின் போது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதோடு இருதரப்பினருக்கும் இடையில் உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ளல் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை பிரதிநிதிகள் குழுமத்தின் பிரதிப் பிரதானி லார்ஸ் பிறெடால் (Lars Bredal) அவர்களும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் விஜித ஹேரத்தும் பங்கேற்றனர்.