
அரிசி மோசடிக்கு முயற்சி நடக்கிறதா ?
அரிசியை அவசரமாக இறக்குமதி செய்வதால் சீனி மோசடி போன்று அரிசி மோசடிக்கு முயற்சிக்கப்படுகின்றதா? என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி யெழுப்பியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
50,000 மெற்றிக்டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பண்டிகை காலத்தில் அரிசியை கொண்டு வருவதென்றால் நேற்று அனுமதி வழங்கி அதனை செய்ய முடியுமா? குறைந்தது 15, 20 நாட்களாவது ஆகும். ஏற்கனவே ஹவுடா துறைமுகத்தில் கப்பலொன்று இருக்கின்றது. இப்படி செய்து கொண்டு வர்த்தமானியொன்றை வெளியிடப் போகின்றனர். சீனியை போன்று வரியை குறைத்ததும் இந்த அரிசி வரும். இவ்வாறு ஹவுடா துறைமுகத்தில் வைத்துகொண்டா இதனை செய்யப் போகின்றீர்கள்.
இதேவேளை பெரும்போக அறுவடை வடக்கு, கிழக்கில் ஜனவரியில் ஆரம்பமாகவுள்ளது. இவ்வாறான நேரத்தில் அரிசியை இறக்குமதி செய்வது சரியா? இலங்கையில் வருடத்திற்கான 80 வீதம் பெரும்போகத்தில் கிடைக்கின்றது. இந்நிலையில் அரிசியை இறக்குமதி செய்வதால் விவசாயிகளுக்கே பாதிப்பாக அமையும். இதனால் இது மோசடியான ஒன்றாக அமையும். இது எவரேனும் பெரிய வர்த்தகரின் வேலையாக இருக்கலாம். இல்லையென்றால் பொதுத் தேர்தல் நெருங்கி வருகின்றது என்று கூறலாம்.
எவ்வாறாயினும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் வர்த்தகர்களுடன் இணைந்து அரசாங்கமம் செய்யும் இவ்வாறான வேலைகளால் சாதாரண விவசாயிகளுக்கே பாதிப்பு ஏற்படும்.

