
இலங்கை -இந்திய கப்பல் சேவையை புலம்பெயர் தமிழர்கள் நடத்தலாம்
தலைமன்னார் பியர் துறைமுகத்தை அபிவிருதி செய்து கப்பல் தலைமன்னார்-இராமேஸ்வரம் பயணிகள் கப்பலை சேவையை சேவையை நடத்த விரும்பினால் புலம்பெயர் தமிழர்களும் விண்ணப்பிக்க முடியும் என துறைமுகம்,கப்பற்றுறை, மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெகுஜன ஊடகம் மற்றும் துறைமுகம்,கப்பற்றுறை, மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. தனது உரையில்,
அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தலை மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது எங்களையும் அழைத்திருந்தார்.நாமும் அவருடன் சென்றோம். தலைமன்னார்-இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவை தொடர்பாக ஆராயப்பட்டது. அதன்பின்னர் அமைச்சரை நான் நேரில் சந்தித்து இந்த முயற்சி என்ன நிலையில் இருக்கின்றது எனக்கேட்டபோது ”தனியார் நிறுவனங்கள் ஏதாவது முன்வந்தால் தலைமன்னார் பியர் துறைமுகத்தை அபிவிருதி செய்து கப்பல் சேவையை நடத்த முடியும்”என்று கூறியிருந்தார்.
நானும் புலம்பெயர் நாடுகளில் உள்ள, இந்தியாவில் உள்ள வர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இந்நிலையில் கனடாவிலிருந்து ஒரு இலங்கைத் தமிழர், அவர் கனடா குடியுரிமை பெற்றவர் இந்தத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முன்வந்ததாகவும் ,எனினும் நீங்கள் அதற்கு, அரசில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகவும் கூறியதாக நான் அறிந்தேன் என்றார்.
இதற்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதிலளிக்கையில்,
இந்த விடயத்தில் நாம் தனியார் துறையை ஊக்குவிக்கின்றோம். இரு தினங்களுக்கு முன்னர் இது தொடர்பில் நான் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்துள்ளேன். இன்னும் 5 தினங்களுக்குள் ஒரு தீர்மானத்திற்கு வரமுடியும்.எனவே நீங்கள் கூறுபவர்களை முறையாக விண்ணப்பிக்க கூறுங்கள். அவர்களிடம் நாம் ஆரம்பம் தொடர்பில் கடிதம் கோருவோம். அதன் பின்னர் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றார்.

