நில அபகரிப்பிற்கு எதிரான போராட்டங்கள் தொடரும்

நில அபகரிப்பிற்கு எதிரான போராட்டங்கள் தொடரும்

வடக்கு,கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நில அபகரிப்புகளுக்கெதிராக தமிழரசுக்கட்சியினரால் வவுனியா பழைய பஸ் நிலையப்பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

மயிலத்தமடுவில் தமிழ்மக்களின் மேய்ச்சல் தரையில் சிங்கள குடியேற்றம் ஏற்ப்படுத்தப் படுகின்றது. இதுபோலவே வடக்கு,கிழக்கில் சிங்களபௌத்த மயமாக்கல் செயற் பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.கடந்த 70 வருடங்களாக தமிழ்மக்கள் இனத்தின் விடுதலைக்காக மட்டுமல்ல, நிலமானது பௌத்தசிங்கள மயமாக்கல் ஆக்கப்படுவதற்கு எதிராகவும் போராடி வந்திருக்கின்றனர்.

எனவே எமது நிலத்தை ஆக்கிரமிப்பதற்கும் எதிரான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள எமது கட்சியின் மாநாட்டிலும் நாங்கள் இனவிடுதலைக்காகவும் நில விடுதலைக்காகவும் ஜனநாயக வழியிலான போராட்டங்களை முன்னெடுப்பதற்கான திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து. அதன்பின்னர் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.அரசுக்கெதிரான இந்தப்போராட்டங்கள் நிச்சயம் தொடரும் என்றார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )