
அநுரகுமார மாத்திரமே பொது வேட்பாளராக போட்டியிட தகுதியுடையவர்; அடித்துக்கூறும் ஜே.வி.பி.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மட்டுமே எதிர்கால தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்கக்கூடிய ஒரே “பொது வேட்பாளர்” என ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
“பொது வேட்பாளரைத் தேட வேண்டிய அவசியமில்லை. ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்க பொது வேட்பாளர் ஒருவர் தேவை என எவரேனும் கூறினால், அவர் ஏற்கனவே எங்களுடன் இணைந்துவிட்டார் என்பதே அர்த்தகம்.
ரணில் விக்ரமசிங்கவை மட்டுமல்ல, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போன்றவர்களால் கட்டுப்படுத்தப்படும் எந்தவொரு அமைப்பையும் தோற்கடிக்கக்கூடிய ஒரே தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மாத்திரமே. ஆகவே, பொது வேட்பாளரை தேட வேண்டிய அவசியம் இல்லை.
2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்க முடியும்.
நாட்டில் ஆட்சிமாற்றத்துக்கான சாதகங்கள் அதிகமாக உள்ளதாக பல கருத்துக்கணிப்புகள் கூறுவதுடன், அரசாங்கத்துக்கு எதிரான அனைத்து சக்திகளும் கைகோர்க்க வேண்டிய ஒரே இடமாக தேசிய மக்கள் சக்தியே உள்ளது“ என்றார்.
இதேவேளை, ஜே.வி.பியின் பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க எம்.பி,
“அயர்லாந்தில் எனக்கு வீடு இருப்பதாக நாழிதெளொன்று செய்தி வெளியிட்டது. இதுதொடர்பாக இதற்கு எதிராக பத்திரிகை ஸ்தாபனத்தில் முறைப்பாடு பதிவுசெய்த போது வெளியிடப்பட்ட செய்தி பொய்யானது எனத் தெரிவிக்கப்பட்டது.
எங்கள் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளுக்கு அவர்களின் சொந்த ஊடக நிறுவனங்களிலேயே பதிலும் அளிக்கப்பட்டது.
ஜே.வி.பியின் கணக்குகளில் 800 கோடி ரூபா இருப்பதாக போலி பிரசாரத்தை முன்னெடுத்தனர். எங்கள்மீது அரசியல் குற்றம் சுமத்த முடியாது என்பதற்காக அவதூறுகளை பரப்புகின்றனர்“ எனக் கூறியுள்ளார்.

