
மொட்டில் மீண்டும் விமல், கம்மன்பில!
முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை மீண்டும் பொதுஜன பெரமுனவுடன் இணைக்கும் பணியை மேற்கொள்ளுமாறு அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக தெரியவருகிறது.
இந்த இணைப்பை ஏற்படுத்துவதற்கான பொருத்தமான ஒரே நபர் மகிந்த ராஜபக்ச என்பதால், அதனை மேலும் தாமதிக்காது உடனடியாக செய்ய வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் புதிய தலைமைத்துவம் உருவாகி வருவதாலும் கட்சிக்கு மீண்டும் மக்கள் ஆதரவு கிடைத்து வருவதாலும் விமல் மற்றும் கம்மன்பில ஆகியோரை மீண்டும் கட்சியுடன் இணைப்பதன் மூலம் கட்சியின் பொறிமுறைக்கு வலுக்கிடைக்கும் என்பது இந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடாக உள்ளது.
அடுத்தாண்டு தேர்தல் ஆண்டு என்பதால், தற்போது கட்சியின் கட்டமைப்பை உருவாக்க இவ்வாறான விடயங்கள் குறித்து பொதுஜன பெரமுன கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் விமல் மற்றும் கம்மன்பில ஆகியேர் மகிந்த ராஜபக்சவுடன் மிக நெருக்கமாக செயற்பட்டவர்கள் என்பதால், அவர்கள், மகிந்தவுக்கு செவி கொடுப்பார்கள் எனவும் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கருதுகின்றனர்.
மேலும் வீரவங்ச மற்றும் கம்மன்பில ஆகியோரின் உரை,விமர்சிக்கும் தோரணை மற்றும் அவர்கள் பிரசாரம் செய்யும் விதத்தை விரும்பும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவில் இருப்பதாக தெரியவருகிறது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் மற்றும் அன்றைய நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரை விமர்சித்தமை, அரசாங்கத்தை விமர்சிக்க கொழும்பில் மாநாடு ஒன்றை நடத்தியமை என்பன காரணமாக விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அப்போது வகித்து வந்த அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதன் பின்னர் அவர்கள் பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி செயற்பட்டு வருகின்றனர்.

