
320 மில்லியன் டொலர் செலவில் இலங்கை அனுப்பிய விண்கலம் எங்கே ?
இலங்கையினால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட சுப்ரீம் சட் விண்கலத்திற்காக செலவு செய்யப்பட்டதாக கூறப்படும் 320 மில்லியன் டொலர் நிதிக்கும் என்ன நடந்தது என்று பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியா விண்வெளி பயணத்தில் சந்திராயன் 1, சந்திராயன் 2 மற்றும் சந்திராயன் 3 என்று மூன்று முயற்சிகளை மேற்கொண்டே சந்திரனில் காலடி வைத்துள்ளது. இந்த மூன்று திட்டங்களுக்கும் மொத்தமாக 263 மில்லியன் டொலர்களே செலவாகியுள்ளது.
ஆனால் எமது நாட்டில் 2012 ஆம் ஆண்டில் ‘சுப்ரீம்சட் 1’ விண்கலத் திட்டத்திற்காக 320 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செலவு செய்யப்பட்ட 320 மில்லியன் டொலருக்கும் என்ன நடந்தது என்பது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிக்கையொன்றை முன்வைக்குமாறு நான் சபை முதல்வரிடம் கோரிக்கை விடுக்கின்றேன். இவ்வளவு செலவு செய்தும் அந்த விண்கலம் சந்திரனுக்கு போகவில்லை. ஆனால் மாறாக நாட்டை பாதாளத்திற்கே கொண்டு சென்றுள்ளனர் என்றார்.

