
சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி ஆட்சிமுறையே அவசியம்; கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு அழுத்தம்
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகளுக்கு மத்தியில், இலங்கையின் பிரதான தமிழ் அரசியல் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA), சுயநிர்ணய உரிமைகளுடன் கூடிய கூட்டாட்சி முறைக்கான தனது கோரிக்கையை முன்வைத்துள்ளது.
ஜனாதிபதி விக்ரமசிங்க கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில், பொலிஸ் அதிகாரங்களை தவிர்த்து 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்குமாறு வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், ஜனாதிபதிக்கு நேற்று திங்கட்கிழமை எழுதியுள்ள அவசரக் கடிதத்தில், சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
“எமது வரலாற்று வாழ்விடப் பிரதேசத்தில் சுயநிர்ணய உரிமையுடன், சமஷ்டி கட்டமைப்பின் மெய்யியலின் அடிப்படையிலான அரசியல் தீர்வை நோக்கிச் செயற்படுவதற்கு வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களிடம் இருந்து நாங்கள் பலமுறை ஆணையைப் பெற்றுள்ளோம்” என்று இரா.சம்பந்தன் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
13ஆவது திருத்தத்தின் மூலம் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட போதிலும், அரசியலமைப்பின் ஒற்றையாட்சியானது சில சமயங்களில் மத்திய அரசாங்கம் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை மீட்டெடுக்க வழிவகுத்தது.
அரசியலமைப்பில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் விரைவாக அமுல்படுத்தவும், நீண்டகாலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறும் இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் கடிதத்தின் ஊடாக கோரியுள்ளார்.

