
குருதூர் மலையில் இருந்து எம்மை வெளியேறுமாறு உத்தரவிட தமிழ் நீதிபதிக்கு அதிகாரம் இல்லை
குறுந்தூர் மலை விகாரையிலிருந்து எம்மை வெளியேறுமாறு உத்தரவிடும் அதிகாரம் முல்லைத்தீவு நீதிமன்ற தமிழ் நீதிபதிக்கு கிடையாது என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
குறுந்தூர் மலை விகாரையின் தொல்பொருள் மரபுரிமை தொடர்பில் கேள்வி எழுப்பும் அதிகாரமும் இந்த தமிழ் நீதிபதிக்கு கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சிங்கள – பௌத்த நாடு என்பதை இந்த தமிழ் நீதிபதி மறந்துவிட கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார் .
இலங்கை, சிங்கள – பௌத்த நாடு.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2000 வருட கால பழமையான தொல்பொருள் மரபுரிமைகள் பரவலாக காணப்படுகின்றன.
குறுந்தூர் மலையில் பௌத்த மரபுரிமைகள் உள்ளன.
குறுந்தூர் மலைக்கு நாங்கள் அண்மையில் சென்றிருந்த போது அவ்விடத்துக்கு வருகை தந்த முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி நாங்கள் விசாரணைக்கு இடையூறு விளைவிப்பதாக குறிப்பிட்டு எம்மை வெளியேறுமாறு கூறினார்.
மேலும் அங்கு வழிபாட்டிற்காக வருகைதந்த பௌத்த தேரரையும் வெளியேறுமாறு கூறினார்.
அந்த தமிழ் நீதிபதியின் செயற்பாட்டை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
எம்மை குறுந்தூர் மலையில் இருந்து வெளியேற்றும் அதிகாரமும் அவருக்கு கிடையாது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட வகையில் பௌத்த மரபுரிமைகள் அழிக்கப்படுகின்றன.
அதற்கு சில நீதிபதிகளும் ஆதரவு வழங்குகிறார்கள்.
முல்லைத்தீவு நீதிபதி அரசியலமைப்பின் ஒன்பதாவது அத்தியாயத்தை முழுமையாக மீறியுள்ளார் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளை அழித்து அதன் மீது திரிசூலம் உட்பட மத அடையாளங்கள் பொறிக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள – பௌத்த மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

