
ரணில் புதுடில்லி செல்ல முன் இந்திய வெளிவிவகார செயலாளர் வருகிறார்
வினய் மோகன் குவத்ரா அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூலை 20ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதுடில்லி விஜயத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அவர் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வௌிவிவகார செயலாளர் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்திய வெளியுறவு செயலாளர் இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெல்லியில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதற்கான விசேட ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார். இதன்போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

