
அரசின் உதவித் திட்டத்திற்கு அரசிற்குள்ளேயே எதிர்ப்பு வலுக்கிறது
அரசாங்கத்தின் ‘அஸ்வெசும’ உதவித் திட்டம் தொடர்பில் அரசாங்கத்திற்குள்ளேயே எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இது தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கும் அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது.
கடந்த காலங்களில் சமூர்த்தி கொடுப்பனவு இருந்தும், இம்முறை குறித்த உதவித் திட்டத்தில் உள்வாங்காத மற்றும் வறுமை நிலைமையில் உள்ள பலர் நாடு முழுவதும் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
சில பிரதேசங்களில் இந்த போராட்டத்தில் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்களும் இருப்பதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலைமையில் இந்த வேலைத்திட்டத்தில் உதவிகளை பெற்றுக்கொள்பவர்கள் தொடர்பான தகவல்கள் குறித்து பிரச்சினைகள் உள்ளதாகவும், இது தொடர்பாக ஜனாதிபதியை சந்திப்பதற்கு தாம் எதிர்பார்ப்பதாகவும் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களும் பல்வேறு இடங்களில் இந்த வேலைத்திட்டங்களை விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

