
இலங்கையில் சுதந்திரமான விசாரணை சந்தேகமேயென உலக நாடுகள் ஏற்பு
பிவித்துரு ஹெலஉறுமய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான குழுவினர் நேற்று புதன்கிழமை முல்லைத்தீவு குருந்தூர்மலை பகுதிக்கு சென்றனர்.
பௌத்த கொடிகளை கைகளில் ஏந்தியவாறு அங்கு சென்ற இவர்கள், அங்கு அமைந்துள்ள விகாரையில் வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.
இதன்போது பிக்குகள் சிலரும் அவர்களுடன் அங்கு சென்றிருந்தனர்.
தொல்பொருள் சின்னங்கள் காணப்படும் குருந்தூர்மலை பௌத்தர்களுக்கா, இந்துக்களுக்கா சொந்தமானது என்ற சர்ச்சைகள் நிலவும் நிலையில், தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட சில தரப்பினரின் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பொய்களை வெளிப்படுத்துவோம் என்று சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில 21 ஆம் திகதி குருந்தூர் வருவோம் என்றும் சில தினங்களுக்கு முன்னர் பதிவிட்டிருந்தார்.
இதற்கமைய நேற்றைய தினம் முற்பகல் கம்மன்பில மற்றும் பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் கைகளில் பௌத்த கொடிகளை ஏந்தியவாறு அங்கு சென்றனர். அதன்போது அந்தப் பகுதியில் இருந்த தமிழர்கள் சிலரையும் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினர். பின்னர் அங்கிருந்து குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு சென்று, அங்கே மலர் வைத்து, தீபங்களை ஏற்றி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதன்போது அந்தப் பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அப்பகுதி மக்களுடன் உதய கம்மன்பில எம்.பி. கலந்துரையாடுகையில்
வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் எம்.பி.க்கள் கொழும்புக்கு வந்து மக்கள் பிரச்சினையை கூறுகின்ற போதும், அதன் உண்மைத்தன்மை எமக்கு தெரியாது .எனவே அதன் உண்மைத்தன்மையை அறியவே நான் இங்கு வந்தேன்.
தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாப்பதோடு, மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுக்க வேண்டுமென்பது எமது நோக்கம்.நான் இங்கு பார்த்தவை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் பிக்குமாருடனும் கலந்துரையாடுவேன். இதனை தொடர்ந்து இந்த விடயம் தொடர்பான சரியான தீர்மானம் மேற்கொள்ளப்படும். உங்கள் தரப்பு கதையை கேட்டேன்.
இலங்கை தொல்பொருள் திணைக்களம், பிக்குமார் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரதும் கதையை நான் கேட்க வேண்டும். இதனை தொடர்ந்து, எந்தவொரு தரப்பினரையும் பாதிக்காத வகையில் இந்த பிரச்சினை தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இது 2 100 வருடங்கள் பழைமையான விகாரை. இந்த விகாரை எமக்கு மாத்திரமின்றி முழு உலகுக்கும் சொந்தமானது. இவ்வாறான பழமையான சொத்துக்கள் வேறு நாடுகளில் இல்லை.
வயல் நிலங்களை தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த நிலங்களாக பெயரிட மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பில் ஆராய வேண்டும். எதனடிப்படையில் திணைக்களத்தினர் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.இந்த வயல் நிலங்களுக்கடியில் எதாவது இருப்பதை தொல்பொருள் திணைக்களத்தினர் இணங்கண்டிருந்தால், குறித்த இடம் பாதுகாக்கப்பட வேண்டும்.
மக்களால் எந்த இடத்திலும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதனடிப்படையில், மக்களுக்கு எந்தவொரு தீங்கும் நடக்க நாம் இடமளிக்க மாட்டோம் என்றார்.

