தொடர்ந்தும் ரணிலை மொட்டு ஆதரிக்கும்

தொடர்ந்தும் ரணிலை மொட்டு ஆதரிக்கும்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் தொடர்ச்சியாக நிலவிய முரண்பாட்டை களைந்து நாட்டின் அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு தெரியாமல் அரசாங்க நிகழ்ச்சிகளுக்கு தமது உறுப்பினர்களை அழைப்பது பொருத்தமற்றது என அக்கட்சியின் தலைவர்கள் அங்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல் மாவட்ட அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்கான விசேட கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களின் பிரதிநிதிகளை ஜனாதிபதி அழைத்திருந்தார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் ஜனாதிபதியுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளனர்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் உள்விவகாரங்களுடன் தொடர்புபட்ட விடயங்களில் தலையிடக் கூடாது என பொதுஜனபெரமுன தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி இனிமேல் அரசாங்கத்தின் எந்தவொரு வேலைத் திட்டத்திற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை அழைப்பதாயின் அதனை முதலில் கட்சிக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியுடன் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை தொடர்ந்தும் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதுடன், சகல பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவில்லை. பிரதமர் தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )