இன்றுடன் யாழுக்கான ரயில் சேவை நிறுத்தம்; யாழில் இருந்து கொழும்புக்கு மேலதிகமாக 33 பஸ்கள்

இன்றுடன் யாழுக்கான ரயில் சேவை நிறுத்தம்; யாழில் இருந்து கொழும்புக்கு மேலதிகமாக 33 பஸ்கள்

கொழும்பில் இருந்து வடக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள் நாளை  5ஆம் திகதியுடன் அநுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்படவுள்ள நிலையில் , யாழ்ப்பாணம் – கொழும்பு பஸ் சேவைக்காக மேலதிகமாக 33 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை, வவுனியா அனுராதபுரம் பாதை திருத்த வேலை காரணமாக குறைந்தது ஆறு மாதங்களுக்கு புகையிரத சேவையானது இடைநிறுத்தப்படுகின்றது .

அதனால் வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை ,தேசிய போக்குவரத்து ஆணைக்குழு புகையிரத திணைக்களத்தினருடன் இணைந்து சில மாற்று நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம்.

அந்த வகையில் குறிப்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்து சபை, புகையிரத திணைக்களம், வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையுடன் இணைந்து என்ன மாற்றங்களை செய்யலாம் என்பதை தீர்மானித்து மூன்று வகையான தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம்.

1. யாழ்ப்பாணத்திலிருந்து செல்கின்ற யாழ் ராணி ரயில் தற்பொழுது முறிகண்டி வரை பயணிக்கின்றது. அந்த ரயில் வவுனியா வரை செல்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.

வவுனியாவில் இருந்து அனுராதபுரம் சென்று புகையிரதத்தில் கொழும்பு செல்ல விரும்புவோருக்காக வவுனியா அனுராதபுரத்திற்கு 20 பஸ்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபட உள்ளன.

2. தனியார் போக்குவரத்து சேவை மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் அந்தந்த மாவட்டத்தில் இருந்து நேரடியாக அனுராதபுரத்திற்கு சென்று அங்கிருந்து  பயணிகள் ரயிலில் செல்லக்கூடியவாறு ஒழுங்கு செய்திருக்கின்றோம்.

நேரடியாக பஸ்களிலே கொழும்புக்கு செல்லக்கூடிய வாறான ஏற்பாடுகளும் செயற்படுகின்றது. குறிப்பாக நேரடியாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பல குளிரூட்டப்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன.

தற்பொழுது 38 பஸ்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடியாக கொழும்பிற்கு சேவையில் ஈடுபடுகின்றன. அவை தங்களுக்கு ஏற்ற முற்பதிவுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அதை விட மேலதிகமாக 33 குளிரூட்டப்பட்ட பஸ்கள் இருக்கின்றன. அந்த பஸ்களும் தற்போது கடந்த கால கொரோனா மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சேவைகள் ஈடுபட வில்லை. அந்த 33 பஸ்களையும் மீண்டும் சேவையில் ஈடுபடுமாறு அதனோடு தொடர்புடையவர்களை கோரியுள்ளோம்.

எனவே ரயில் சேவை குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்தப்பட்டாலும் பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவைகள் தடைப்படாது செயல்படுத்துவதற்கு முயற்சிக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )