
பசிலின் அதிகாரம் பறிக்கப்பட்டது
பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் எதனையும் செய்ய முடியாது என்பது இறுதியாக இடம்பெற்ற வாக்கெடுப்பு எடுத்துக்காட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
பசில் ராஜபக்சவின் வார்த்தைகளுக்கு மாறாக பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் இதன் மூலம் பசில் ராஜபக்ஷவுக்கு அதிகாரம் இல்லாதமை புலப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டில் இன்று மக்கள் வாழ முடியாத மிக மோசமான நிலைமை உருவாகி உள்ளதாகவும், பிள்ளைகளுக்கு உணவளிப்பதற்காக அடமானம் வைப்பதற்கு எதுவுமில்லாமல் மக்கள் தவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பாடசாலை மாணவர்களில் சுமார் முப்பது வீதமானவர்கள் உணவின்றி பாடசாலைக்கு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

