
போராட்டக்காரர்களுக்கு புனர்வாழ்வு; யார் எடுத்த தீர்மானம் !
போராட்டக்காரர்களுக்கு புனர்வாழ்வளிக்க அரசு தீர்மானித்திருக்கின்றது. இந்த தீர்மானத்தை யார் எடுப்பது? பாதுகாப்பு அமைச்சரா அல்லது செயலாளரா ?புனர்வாழ்வளிப்பதற்கான அளவுகோல் என்ன? அதனை தீர்மானிப்பது யார்? என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிலையியற் கட்டளை திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் பேசுகையில்,
கடந்த காலங்களில் நாங்கள் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்தபோது பல்வேறு ஜனநாயக விராேத செயல்களுக்கு எதிராக அன்று இருந்த அரசாங்கங்களுக்கு எதிராக வீதிக்கிறங்கி போராட்டம் செய்திருக்கின்றோம். எமது மூதாதையர்களும் அவர்களது உரிமைகளுக்காக போராடி இருக்கின்றனர். ஆனால் அப்போது இருந்த அரசாங்கங்கள் போராட்டக்காரர்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
எமது நாட்டில் புனர்வாழ்வளிக்க முறை இருக்கின்றது. சிறிய குற்றங்களுக்கு குற்றவாளியாக்கப்பட்டால் நீதிமன்ற உத்தரவுக்காமைய அவர்கள் புனர்வாழ்வளிக்கப்படுவார்கள். ஆனால் இன்று போராட்டக்காரர்களை புனர்வாழ்வளிக்க அரசு தீர்மானித்திருக்கின்றது. இந்த தீர்மானத்தை யார் எடுப்பது? பாதுகாப்பு அமைச்சரா அல்லது செயலாளரா ?புனர்வாழ்வளிப்பதற்கான அளவுகோல் என்ன? அதனை தீர்மானிப்பது யார்?
மேலும் உலக நாடுகள் அனைத்தும் இலங்கை தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் ஜனநாயகத்துக்கு சவால் விடும் செயற்பாடுகளை அரசு கைவிட வேண்டும். அதே வேளை, நாட்டு மக்களை மேலும் நெருக்கடி நிலைக்குத் தள்ளும் செயற்பாடுகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு இன்று நடைபெறும் நிலையில் மேலும் எமது நாட்டை சர்வதேசத்தில் தனிமைப்படுத்த வேண்டாம்.
களனிப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ கருத்துக்களை முன் வைத்திருந்தார்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சுதந்திரமாக தங்களது கருத்துக்களை வெளியிடுவதற்கான சுதந்திரமும் உரிமையும் உண்டு என்றார்.

