
ஐ.நா. தீர்மானம் நியாயமற்றது; நிராகரிக்கிறது இலங்கை அரசு; -நட்பு நாடுகள் துணையுடன் வாக்கெடுப்பை எதிர்கொள்ளத் தயார்; -நாட்டின் நற்பெயருக்கு களங்கம் என்கிறார் அமைச்சர் அலி சப்ரி
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படும் தீர்மானம் நியாயமற்றது எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்தத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த இலங்கை கோரும் எனவும் கூறியுள்ளார்.
இந்தத் தீர்மானம் இலங்கை அரசியலமைப்பிற்கு எதிரானது. தீர்மானத்துடன் நாங்கள் உடன்படப் போவதில்லை. நாம் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் இதை எதிர்கொள்வோம். சமரசம் செய்ய முடியாத விடயங்கள் தீர்மானத்தில் உள்ளன. நட்பு நாடுகளை இத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கக் கோருவோம் எனவும் அலி சப்ரி குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடியின் போது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை மனித உரிமைகள் விவகாரம் ஐரோப்பாவின் ஜி.எஸ்.பி. பிளஸ் போன்ற வரிச் சலுகைகளில் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால், புதிய தீர்மானம் சர்வதேச வர்த்தகத்தில் இலங்கைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. இலங்கை முன்னர் வழங்கிய பல வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் வரிச் சலுகை நீக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே அச்சுறுத்தியுள்ளது.
“இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்” என்ற தலைப்பில் பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மொன்டனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளின் அனுசரணையுடன் இலங்கை தொடர்பான தீர்மான வரைவு மனித உரிமைகள் பேரவை செயலகத்தில் கடந்த வாரம் முறைப்படிகையளிக்கப்பட்டது.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம், பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலின் மனித உரிமைகள் தாக்கம் உட்பட இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமையை கண்காணித்து அறிக்கையிடுவதை மேம்படுத்துமாறு இந்த தீர்மானம் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இந்தத் தீர்மானம் நியாயமற்றது என வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி நேற்று வியாழக்கிழமைஎக்கனமி நெக்ஸ்ட்டிடம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானம் இலங்கை அரசியலமைப்பிற்கு எதிரானது. தீர்மானத்துடன் நாங்கள் உடன்படப் போவதில்லை. நாம் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் இதை எதிர்கொள்வோம். சமரசம் செய்ய முடியாத வி்யங்கள் தீர்மானத்தில் உள்ளன. நட்பு நாடுகளை இத்தீர்மானத்துக் குஎதிராக வாக்களிக்கக் கோருவோம் எனவும் அலி சப்ரி குறிப்பிட்டார்.
மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் போர்க்குற்ற சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறை இலங்கைக்கு கடும் அழுத்தம் கொடுப்பதாக அமைந்துள்ளது. இந்த அலுவலகம் நிதி பற்றாக்குறையை எதிர்கொண்ட போதிலும் பொறிமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2009 இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மக்கள் அரச படைகளால் கொல்லப்பட்டதாகக் இலங்கை மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால் இலங்கையின் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் தொடர்பில் பரவலாக விமர்சிக்கப்படுகிறது. எனினும் இந்தக் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்துவருகிறது.
சில மேற்கத்திய நாடுகள் ஏற்கனவே போரில் முன்னணியில் நின்று தலைமை தாங்கிய சில இராணுவத் அதிகாரிகளுக்கு அவர்களின் குற்றச் செயல்களின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பயணத் தடை விதித்துள்ளன. கனடாவும் ஜேர்மனியும் இலங்கை இராணுவ அதிகாரிகளை அந்த நாடுகளில் தூதரகப் பணிகளில் ஈடுபடுத்த மறுத்துள்ளன.
இந்நிலையில் தற்போதைய தீர்மானம் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வதை விரும்புவதால் இது கவலைக்குரியது என்று அமைச்சர் சப்ரி கூறினார்.
குறிப்பாக ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை மற்றும் இலங்கைக்கு வெளியே உள்ள இலங்கை பாதுகாப்பு படைகள் மீது வழக்குத் தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
ஊழலை விசாரணை செய்தல் மற்றும் பொதுமக்கள் மற்றும் முன்னாள் அரச அதிகாரிகள் உட்பட பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடுப்பது உட்பட இலங்கையின் தற்போதைய நாணய நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு புதிய தீர்மானம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
அதேவேளை, சுதந்திரமான, பாரபட்சமற்ற, வெளிப்படையான முயற்சிகளுக்கு உதவவும் ஆதரவளிக்கவும் தயாராக நிற்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை தீா்மானம் வலியுறுத்துகிறது.
இதேவேளை, தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார குற்றங்கள் என்ற சொற்பிரயோகம், உயர்ஸ்தானிகரின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என அலி சப்ரி குறிப்பிட்டார்.
இலங்கை தொடர்பாக குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கையில் வழக்குத் தொடர வேண்டும். இலங்கையில் பொருளாதார மீட்சி ஏற்பட வேண்டும். இதற்கு சர்வதேச சமூகம் எமக்கு ஆதரவளிக்க வேண்டும். இந்த நேரத்தில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது போன்ற தீர்மானம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எங்களுடன் இணைந்து பணியாற்ற மக்கள் விரும்ப மாட்டார்கள். புதிதாக யாரும் வந்து முதலீடு செய்ய விரும்பமாட்டார்கள் எனவும் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

