
பளையில் இராணுவத்திற்கு ஏன் 1840 ஏக்கர் காணி ?; யாழ்.,கிளிநொச்சியில் 18,000 பேருக்கு குடியிருக்க காணிகள் இல்லை
யாழ்ப்பாணத்தில் 14,000 பேருக்கும் கிளிநொச்சியில் 4000 பேருக்கு குடியிருக்க காணிகள் இல்லாத நிலையில் பளையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான 1840 ஏக்கர் காணியை இராணுவத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான் எஸ்.ஸ்ரீதரன் குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பிள்ளைகள் மற்றும் தாய்மாரின் மந்தபோஷனை தொடர்பில் யுனிசெப் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம் சாட்டிய
அவர் மேலும் பேசுகையில்,
யாழ்ப்பாணத்தில் 14,000 பேருக்கு குடியிருக்க காணிகள் இல்லை. கிளிநொச்சியில் 4,000 பேருக்கு குடியிருக்க காணிகள் இல்லை .தெருக்களில் இருக்கின்றார்கள்,உறவினர்,நண்பர்களின் காணி களில் இருக்கின்றார்கள்.என்னுடைய காரியாலயத்துக்கு தினசரி குறைந்தது 10 பேர் காணி கேட்டு வருகின்றார்கள். இது தொடர்பாக நான் வடக்கு ஆளுநருக்கு 4 தடவைகள் கடிதம் எழுதினேன்.
பளையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான 1840 ஏக்கர் காணியில் ஒவ்வொருவருக்கும் அரை ஏக்கர் வழங்குங்கள் .அவர்கள் தொழில் செய்து அந்த இடத்தில் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். நல்லதண்ணி உள்ள இடம். தோட்டம் செய்யக்கூடிய நிலம் . எனவே காணி இல்லாதவர்களுக்கு வழங்குங்கள் எனக்கூறினேன்.
கிளிநொச்சி மாவட்ட அரச அதிபருக்கு கடிதம் எழுதினேன். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. யாருக்கும் ஒரு துண்டு காணி கூட வழங்கப்படவில்லை.
இந்நிலையில் பளையில் உள்ள 1840 ஏக்கர் காணியை, காணி சீர்திருத்த ஆணைக் குழுவுக்கு சொந்தமான காணி என்ற அடிப்படையில் இராணுவத்திற்கு கொடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு அமைச்சரவை அனுமதிக்கு சமர்ப்பிப்பதற்கான முழு முஸ்தீபுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இராணுவம் தோட்டம் செய்வதற்கு கொடுக்கின்றார்கள்.
பலாலியில் தனியாரின் 3500 ஏக்கர் காணியில் இராணுவம் தோட்டம் செய்கின்றது. வட்டக்கச்சியில் அரச காணியில் இராணுவம் தோட்டம் செய்கின்றது. இராணுவத்துக்கு காணி கொடுத்தால் இலங்கையின் போஷாக்கு மட்டம் எழுப்பி விடுமா?கொஞ்சமாவது மூளையை பாவியுங்கள் என்றார்.