
மாகாண சபை தேர்தல், அதிகாரப் பகிர்வு, காணிப் பிரச்சினை இந்தியாவின் ஆதரவைக் கோரும் ஆறு தமிழ் பேசும் கட்சிக் கூட்டணி; இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் சந்திப்பு
மாகாண சபை தேர்தல், அதிகாரப் பகிர்வு, காணி பிரச்சினை சம்பந்தமான மூன்று விடயங்களிலும் இந்தியாவும் எப்போதும் உங்கள் கருத்தை இலங்கை அரசாங்கத்திற்கு சொல்லிக்கொண்டு தான் இருக்கிறது என ஆறு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளிடம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வலியுறுத்தினார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் தமிழ்,முஸ்லிம்,மலையக கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் கருத்து தெரிவித்த போதே எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுவான பிரச்சனைகள் பேசுவதற்கு தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை என்பதை நாங்கள் உருவாக்கியது தொடர்பாக தெளிவுபடுத்தினோம்.
1988-ஆம் ஆண்டில இருந்து அப்படி ஒன்று இருந்ததாகவும் அது புதுசு இல்லை, ஆனால் இடையில் அப்படி இல்லாமல் இருந்தது. இப்போது நாங்கள் திருப்பி அதை மீள பண்ணியிருக்கிறோம் என ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நல்ல விஷயம் என்பதை தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் வெவ்வேறாக உங்கள் அடையாளம் இருக்கிறது நல்லது., ஆனால் ஒரே விஷயத்தை நீங்கள் எல்லாரும் தனித்தனியாக அழுத்தம் கொடுப்பதை விட, சேர்ந்து அழுத்தம் கொடுப்பது எப்போதுமே நல்லது என்றார்.
மாகாண சபை தேர்தல், காணி பிரச்சினை, அதிகாரப் பகிர்வு சம்பந்தமான விஷயங்கள் பற்றி தெரிவித்தோம். அந்த மூன்று விடயத்திலும் இந்தியாவும் எப்போதும் அதே கருத்தை இலங்கை அரசாங்கத்திற்கு சொல்லிக்கொண்டு தான் இருக்கிறது என இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
குறிப்பாக மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது எல்லா சந்தர்ப்பத்திலும் இந்தியா வலியுறுத்துகிறது. அதனால் அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்று கூறினார்.
அடுத்தது காணி பிரச்சினைகளிலும், அவை விடுவிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை நாங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம் எனத் தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவருடன் எமது கூட்டணி கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பாகவும் உயர்ஸ்தானிகரிடம் தெரிவிக்கப்பட்டது.எமது நடவடிக்கைகளுக்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவரிடம் தெரிவித்தோம் எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.
மலையகத்தில் இப்போது இந்திய வீட்டு திட்டங்கள் நடைபெறுகிறது. நாங்கள் இலங்கை அரசாங்கத்தோடு கதைத்து எப்படியாவது அந்த வீடுகள் கட்டிக் கொடுக்கிற வேலையை நாங்களும் செய்விப்போம் என்று இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார் – என்றார்.

