கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்

கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ‘ஈஸ்டர் நீதிக்கான மக்கள் கூட்டமைப்பின்’ அழைப்பாளர் சமீர பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தினத்தன்று நடத்தப்பட்ட கொடூரப் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள உண்மைச் சதி தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சதித்திட்டம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தீர்மானமிக்க சாட்சியங்களை வழங்கியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் - சமீர பெரேரா | Govt Must Arrest Gota Syas Chameera

ராஜபக்ஷ குடும்பத்தினரும் அவர்களைச் சுற்றியுள்ள குழுவினரும் பாதாள உலகக் குழுவைப் போல் செயற்பட்டு, கூலிப்படையினரைப் பயன்படுத்தி விசாரணைகளைத் திசைதிருப்ப முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைக் பகடைக்காயாகப் பயன்படுத்தி, ‘தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்’ எனக் கூறிக்கொண்டு கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரத்தைக் கைப்பற்றினார். இது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் சதியாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பிணங்களை வைத்துக்கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் யார் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தக் கொடூரத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் யார் என்பது முழு நாட்டுக்குமே இப்போது தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள பௌத்த அடையாளத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு முன்னெடுக்கப்பட்ட பெருமளவிலான மோசடிகளும் குற்றங்களும் தற்போது அம்பலமாகி வருகின்றன. உண்மையான பௌத்தர்கள் இத்தகைய கொடூர அரசியலுக்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

மதத் தலைவர்களைக் கூட ஏமாற்றி அதிகாரத்தைக் கைப்பற்றிய இந்த சீரழிந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் இந்த விசாரணைகளை மேலும் தாமதிக்காமல் உடனடியாகச் செயற்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என சமீர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இதை மேலும் ஓரிரு மாதங்களுக்கு இழுத்தடிக்க வேண்டாம் எனவும் இந்த சதித்திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்களுக்கு நீதியை நிலைநாட்டுங்கள் எனவு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )