
40 பௌத்த பிக்குகளைக் கொண்டு போதைப் பொருள் கடத்த முயற்சி: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்
40 பௌத்த பிக்குகளைப் பயன்படுத்தி பாங்கொக்கிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
அண்மையில் பாங்கொக்கிலிருந்து பௌத்த பிக்குகளைக் கொண்டு கடத்தப்பட்ட பாரிய போதைப் பொருள் தொகை மீட்கப்பட்டிருந்தது.
இந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல், மேலும் 40 பிக்குகளை பாங்கொக் அழைத்துச் சென்று அங்கிருந்து போதைப் பொருகளை நாட்டுக்கு கடத்தி வர சகல திட்டங்களையும் வகுத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தப் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளின் பிரதான சூத்திரதாரி ஒர் இலங்கையர் எனவும் அவர் பாங்கொங்கிலிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த பாரிய போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையின் இலங்கைப் பொறுப்பாளராக ஓர் பௌத்த பிக்கு செயற்பட்டுள்ளதாகவும் அவர் கடவத்த ரன்முத்துவல பகுதியில் அமைந்துள்ள விஹாரையைச் சேர்ந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர் சியம்பலபே பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சில காலங்களுக்கு முன்னதாக இந்த பௌத்த பிக்கு, மேலும் 12 பௌத்த பிக்குகளை பாங்கொக் அனுப்பி போதைப் பொருள் கடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
அந்தப் பயணத்தில் இணைந்து கொண்ட 3 பௌத்த பிக்குகள் அண்மையில் கைதான பௌத்த பிக்குகள் குழுவில் அங்கம் வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஒரு தொகை போதைப் பொருளை கடத்துவதற்காக நாற்பது பௌத்த பிக்குகள் ஆயத்தப்படுத்தியுள்ளதாகவும் இதில் ஒன்றிரண்டு தேரர்களைத் தவிர்ந்த ஏனையவர்களுக்கு கடத்தல் விவகாரம் பற்றி எதுவும் தெரியாது எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தர்ம பிரசார நடவடிக்கைகளுக்காக பௌத்த பிக்குகளை தாய்லாந்து அழைத்துச் செல்வதாக குறித்த கடத்தல் கும்பல் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்பய்பட்ட 22 பௌத்த பிக்குகளையும் எதிர்வரும் 7ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

