
அரசியல் கூட்டணியமைக்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் தான் எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம்.அரசியல் கொள்கை வேறுபாட்டினால் இந்த பேரணியில் பங்கேற்க போவதில்லை என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவது தவறானது,ஏனெனில் அரசியல் கூட்டணியமைக்க நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொலிஸ் சேவையில் கீழ் நிலையில் உள்ள ஒருவர் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டால், பதவி நிலையில் சிரேஷ்டத்துவத்தில் இருப்பவர்கள் முரண்படுவார்கள். பொலிஸ்மா அதிபருக்கும், சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும்.பனிப்போர் நிலவும்.கடந்த காலங்களிலும் இவ்வாறான நிலை காணப்பட்டது.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையிலான முரண்பாட்டை ஊடகங்களுக்கு குறிப்பிடுவதை பொலிஸ்மா அதிபர் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.பொலிஸ்மா அதிபரின் செயற்பாடுகள் வெறுக்கத்தக்கவை.அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படும் போது இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படும்.
அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாடு மற்றும் போலியான வாக்குறுதிகளுக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம்.
ஒருசில எதிர்க்கட்சிகள் இந்த பேரணியில் பங்கேற்க போவதில்லை இருப்பினும் இந்த பேரணிக்கு வாழ்த்து தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளன. ஒரு எதிர்க்கட்சி மாத்திரம் இந்த பேரணிக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் தான் எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம்.
அரசியல் கொள்கை வேறுபாட்டினால் இந்த பேரணியில் பங்கேற்க போவதில்லை என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவது தவறானது,ஏனெனில் அரசியல் கூட்டணியமைக்க நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை என்பதை எதிர்க்கட்சிகள் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

