
குருந்தூர்மலையில் மீண்டும் தமிழர் நிலங்கள் ஆக்கிரமிப்பு – அநுர அரசு ஆட்சியிலும்அடாவடி
முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாரைச் சூழலிலுள்ள தமிழ் மக்களின் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து “தொல்லியல் தளம்” என்கின்ற அறிவித்தல் பலகை நிறுவப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முற்பட்ட விவசாயிகளை அங்குள்ள கல்கமுவ சாந்தபோதி தேரர் பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்து சிறையில் அடைந்திருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவ்வாறான சூழலில் விவசாய நிலங்களை நேற்று தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்திருக்கின்றது.
ரணில் அரசு ஆட்சியில் இருந்தபோது இரவோடு இரவாக தண்ணிமுறிப்பு கிராமம் வரையில் 341 ஏக்கர் தொல்லியல் நிலம் என எல்லைக்கற்களை நாட்டியிருந்தார்கள்.
இந்த விடயம் உடனடியாக ரணில் விக்கிரமசிங்க வரை கொண்டு செல்லப்பட்டதனால் ரணில் தலையீடு செய்த காரணத்தால் விவசாய நடவடிக்கைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தப்படவில்லை.
தற்போது அநுர அரசு ஆட்சியில் குருந்தூர்மலை மற்றும் அதனைச் சூழவுள்ள 341 ஏக்கர் விவசாய நிலப்பரப்புக்கும் பாதுகாப்பு வேலி ஒன்றை அமைத்து முழுமையாக ஆக்கிரமிக்க முயற்சிக்கப்படுகின்றது.

