கச்சதீவை சுற்றுலாத் தளமாக மாற்ற இடமளிக்கப் போவதில்லை! ஜனாதிபதியின் சோசனைக்கு கடும் எதிர்ப்பு

கச்சதீவை சுற்றுலாத் தளமாக மாற்ற இடமளிக்கப் போவதில்லை! ஜனாதிபதியின் சோசனைக்கு கடும் எதிர்ப்பு

கச்சத்தீவு சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜோ.ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.

‘தேசிய ஒற்றுமையை நோக்கி எம்மை வழிநடத்தும் சமய விழுமியங்கள்’ எனும் கருப்பொருளில் யாழ்ப்பாணத்தில் ஒக்டோபர் மாதம் நான்காம் திகதி சர்வ மத மாநாடு ஒன்றை நடத்தவுள்ளதாக யாழ் மாவட்ட சர்வமத பேரவை அறிவித்துள்ளது.

யாழ்.மாவட்ட சர்வமத பேரவையின் ஊடக சந்திப்பு இன்று யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

இவ் ஊடக சந்திப்பில் யாழ் மாவட்ட சர்வமத பேரவை தலைவர் சிவஸ்ரீ கிருபானந்த குருக்கள், யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர், யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் அடிகளார் மற்றும் அகில இலங்கை ஜம்மித்துள் உலமா சமை யாழ் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் மௌலவி ஏம்.றழிம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.

இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

கச்சத்தீவு சுற்றுலாத்தலம் ஆக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த வேளை கச்சத்தீவிற்கும் சென்றுள்ளார் என்பதை நாங்களும் அறிந்திருந்தோம்.

மேலும் கச்சத்தீவை சுற்றுலாத்தலமாக மாற்றமுடியும் என்றொரு கருத்தை கூறியதாக அறிகின்றோம். ஆனால், உண்மையாகவே கச்சத்தீவு புனிதமான தீவு. அங்கு புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. அங்கு ஒவ்வொரு வருடமும் இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் பக்தர்கள் ஒன்றுகூடி புனித அந்தோனியாரின் திருவிழாவை தவக்கால யாத்திரையாக வழிபட்டு வருகிறார்கள்.

ஆகவே அது சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் எந்தவிதத்திலும் விரும்பவில்லை. காரணம், புனித தலத்தின் புனிதத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்.

எனவே, ஜனாதிபதி இந்த விடயமாக யாழ். மறைமாவட்டத்தோடு கலந்துரையாடுவார் என்பது எமது நம்பிக்கை. ஏனென்றால், கச்சத்தீவு யாழ். மறைமாவட்டத்தின் கீழ் வருகின்ற பணித்தலமாக இருக்கின்றது. அங்கு நடைபெறும் திருநாட்கள் எல்லாவற்றையும் நாங்கள் தான் ஏற்பாடு செய்கின்றோம். ஆகவே இவை பற்றிய இறுதி முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக ஜனாதிபதி யாழ். மறைமாவட்டத்தின் கருத்துகளை பெற்றுக்கொள்வார் என்பது எமது நம்பிக்கை.

ஜனாதிபதி கச்சத்தீவுக்கு சென்றதன் முக்கிய காரணம் என்னவாக இருக்கலாம் என்று சிந்தித்தபோது அண்மைக்காலமாக, இந்தியா தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் “கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது, அதனை மீளப் பெறவேண்டும்” என பிரச்சாரம் செய்துவருகின்றார்கள்.

எனவேதான் ஜனாதிபதியின் முக்கியமான நோக்கம் “இது இலங்கைக்கு சொந்தமான தீவு, இதை யாருமே உரிமை கோர முடியாது” என்பதை வலியுறுத்துவதற்காகவே அங்கு சென்றுள்ளார். அதனை சுற்றுலாத்தலமாக மாற்றுவது என்பது இரண்டாம் தரமான எண்ணமாக இருந்தாலும், கச்சத்தீவு இலங்கைக்குரியது, அதனை எந்த நாடும் உரிமை கோர முடியாது என்பதை தன்னுடைய கால்தளத்தை பதித்து அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார் என்பதுதான் எங்களுடைய கருத்து என்றார்.

இதன்போது கட்டப்பட்ட விகாரையை அழிப்பதென்பது எந்த மதத்தவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். எனினும் தையிட்டியில் அவர்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்கி சமாதானமாக இந்த விடயத்தை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என யாழ் மாவட்ட சர்வமத பேரவை தலைவர் சிவஸ்ரீ கிருபானந்த குருக்கள் வலியுறுத்தினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )