ரணிலின் குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும்; முன்னிலை சோசலிசக் கட்சி வலியுறுத்தல்

ரணிலின் குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும்; முன்னிலை சோசலிசக் கட்சி வலியுறுத்தல்

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும், அவரது குடியுரிமையை இரத்துச் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் .அந்த அறிக்கையை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் துமிந்த நாகமுவ வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை வலியுறுத்திய அவர் மேலும் கூறுகையில்,

அல்ஜசீரா ஊடகத்துக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பேட்டியை நாட்டு மக்கள் பார்க்க வேண்டும். அதில் அரசியல் அதிகாரத்துடன் மறைக்கப்பட்ட பல விடயங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன. கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு ரணில் விக்கிரமசிங்க சிரித்துக் கொண்டே பதிலளித்தார். இதனூடாக மக்கள் தொடர்பில் அவர் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது

அல்ஜசீரா ஊடகவியலாளர் பட்டலந்த படுகொலை தொடர்பான அறிக்கை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வியெழுப்பிய போது, ‘அவ்வாறான அறிக்கை எங்குள்ளது என்று’ ரணில் விக்கிரமசிங்க கேட்கின்றார் ஊடகவியலாளர் அறிக்கையை காண்பித்த போது ‘அந்த அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டதா’ என்று ரணில் மீண்டும் கேட்கின்றார் .அவ்வாறாயின் பட்டலந்த படுகொலைகள் தொடர்பான விடயம் அரச நிறுவன கட்டமைப்புக்குள் இதுவரையில் உள்வாங்கப்படவில்லை என்றே ரணில் விக்கிரமசிங்க கருதுகிறார்.

பட்டலந்த படுகொலைகள் . மனித உரிமை மீறல்கள் விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கவினால் விசேட குழு நியமிக்கப்பட்டது. அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் அறிக்கை இதுவரை காலமும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டிய தேவை இருந்தது அதனால் அவர் பட்டலந்த அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கவில்லை.

பட்டலந்த விசாரணை அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரிதான வாய்ப்பு கிடைத்துள்ளது.பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு நியாயத்தை வழங்கும் வாய்ப்பு அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளது. எனவே அரசாங்கத்தின் செயற்பாடு எவ்வாறானதாக இருக்குமென்பது தொடர்பில் அவதானிகின்றோம்

1997 ஆம் ஆண்டு பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும், அவரது குடியுரிமையை இரத்துச் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கம் பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )