
எரிபொருள் வரிசைக்கும் ராஜபக்ஷக்களா குரங்குகளா காரணம்?
எரிபொருள் வரிசைக்கும் ராஜபக்ஷக்கள் அல்லது குரங்குகளே காரணம் என்று அரசாங்கம் கூறினாலும் கூறிவிடலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
எரிபொருள் வரிசைக்கும் ராஜபக்ஷக்களே காரணம் என்று கூறிவிடுவார்களோ அல்லது குரங்குகள் காரணம் என்று கூறிவிடுவார்களோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது எரிபொருள் வரிசை உருவாகியுள்ளது. அரசாங்கம் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடியிருக்க வேண்டும். ஏன் பேசுவதற்கு அடுத்த வாரம் வரையில் காத்திருக்க வேண்டும். அவர்கள் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரை சந்திக்கவே நேரம் கேட்டனர். ஆனால் அதனை செய்யாத நிலையிலேயே இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் இந்த அரசாங்கத்திற்காக செயற்பட்டவர்களே. இப்போது அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ளனர்.